ஆசிரியர்கள் இடமாற்றத்தில் கிராமப்புற பாடசாலைகளை கருத்தில் கொள்ள வேண்டும்
ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, கிராமப்புற பாடசாலைகள் பாதிப்படையாத வகையில் இடமாற்றங்கள் அமைய வேண்டும் என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்க தலைவர் பா.தர்மகுமாரன் அறிவித்துள்ளார். ஆசிரியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒவ்வொரு ஆசிரியர்களும் சமமாக மதிக்கப்பட்டு பக்கச்சார்பற்ற வகையில், நீதியானதும் நியாயமானதுமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். அதேபோல் நகரப்புற பாடசாலைகள், கிராமப்புற பாடசாலைகள் என வேறுபாடுகள் காட்டாது ஆசிரியர் வளங்கள் பகிரப்பட வேண்டும். சில கஸ்டப்பட்ட பிரதேசங்களுக்கு பொருத்தமான ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சி என்பதனைக் காட்டிலும் மாணவர்கள் இடைவிலகல்களும் ஏற்படுகிறது. இது தொடர்பில் கல்வித் திணைக்களமும் ஆசிரியர் சங்கங்களும் சிந்திக்க வேண்டும். நகரப்புற பாடசாலைகளுக்கு மேலதிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள், கிராமப்புற பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இன்றி அல்லல்படுகிறார்கள். அதாவது, பாடரீதியான வெற்றிடங்கள், உடல் உள பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நியமனங்கள், கணித, விஞ்ஞான, ஆங்கில பாட ஆசிரியர்கள் இன்மை இன்றும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இதனைக் கவனிக்காது விடும் பட்சத்தில் வடமாகாண கல்வி கீழ் நோக்கியே இருக்கும். நகரப்புற பாடசாலைகளில் ஆசிரியர் வளம் குவிக்கப்படுவதனால் மாணவர்களின் கல்வி நசுக்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்கள் பாடசாலையை மட்டுமே நம்பி கற்கின்றனர். எனவே இங்கு தரமான கல்வியை வழங்க ஆவன செய்வதுடன் உறுதிப்படுத்தவும் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.