யாழ்ப்பாணம்- தமிழகம் இடையில் கப்பல் சேவை!
தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் சேவை ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சா் மன்சுக் மண்டாவியா கூறியிருக்கின்றாா்.
இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு
கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே குறிப்பிட்டுள்ளார். கள ஆய்வின் பின்னர் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும்
சுமார் நான்கு வருடங்கள் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.