யாழில் மரித்துப்போன மனிதாபிமானம்..விபத்தில் சிக்கி வீதியில் அநாதரவாக குற்றுயிராகப் போராடிய நபருக்கு நேர்ந்த சோகம்!!
யாழ்.நாவற்குழி பகுதியில் விபத்தில் சிக்கி 1 மணி நேரத்திற்கும் மேலாக வீதியில் கிடந்து உயிருக்குப் போராடிய முதியவரைக் காப்பாற்றுவதற்கு எவரும் முன்வராத நிலையில் முதியவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவத்தில் நாற்குழி 300 வீட்டு திட்டத்தில் வசிக்கும் அந்தோனி சகாயதாஸ் (வயது 64) என்ற 6 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மீன் வியாபாரம் செய்துவரும் நிலையில் அவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் யாழ்.பாசையூருக்கு மீன் வாங்க சென்றுள்ளார். நாவற்குழி பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் சென்ற வாகனம் அவரை மோதியுள்ளதில் படுகாயமடைந்து வீதியில் குற்றுயிராக கிடந்துள்ளார்.எனினும், வீதியால் சென்ற எவரும் காப்பாற்ற முன்வராத நிலையில் 6.15 மணியளவில் வீதியால் சென்றஒருவர் விபத்தான முதியவரின் அலைபேசியை எடுத்து அவரின் மகனுக்கு தகவல் வழங்கியுள்ளார். மகன் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் கூறப்பட்டது.