யாழில் சுகாதார நடைமுறைகளில் தளர்வுகளை அறிவித்த அரச அதிபர்
இன்று முதல் யாழ்.மாவட்டத்தில் பேணப்பட்ட சுகாதார நடைமுறைகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமையானது கடந்த அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பரில் இன்றுவரை 26 நபர்கள் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளார்கள்.அவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இந்த தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை விட தொற்று உள்ளவர்களுடன் தொடர்புகளை பேணிய 874 குடும்பங்களைச் சேர்ந்த 1905 பேர் சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள்.இன்று முதல் யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் பேணப்பட்டு வந்த சில சுகாதார நடைமுறைகளில் சில தளர்வுகள் மேற்கொள்வதற்கு சுகாதாரப் பகுதியினர் தீர்மானித்துள்ளார்கள். கொரோனா கட்டுப்பாட்டு செயலணியும் இதற்கு அனுமதி அளித்துள்ளது எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் சில சுகாதார நடைமுறைகளில் தளர்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி வணக்கத் தலங்களில் வழிபாட்டு இடங்களில் ஒரே தடவையில் 50 பேர் கலந்து கொள்வதற்காக இன்றிலிருந்து அனுமதிக்கப்படுவார்கள். ஆலயங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றிகொள்வது அவசியமாகும். அத்தோடு கட்டாயமாக கைகழுவி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை பேணி ஆலய பூசை வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பக்தர்கள் உள்ளே செல்லும் போது தங்களுடைய பெயர் விவரங்களை பதிவு செய்து ஆலயத்திற்குள்ளே செல்வது அவசியமாகும். ஹோட்டல் மட்டும் திருமண மண்டபங்களில் கூட்டங்கள் கருத்தரங்குகள் செயலமர்வுகள் 50 பேராக மட்டுப்படுத்தி செயற்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.அதேபோல் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கூட்டங்கள் மற்றும் செயலமர்வுகள் நடத்த விரும்புபவர்கள் முன் கூட்டியே சுகாதாரப் பகுதியினரிடம் குறித்த அனுமதியை விண்ணப்பித்து அதனைப் பெற்று நடாத்த வேண்டும் அங்கேயும் அவர்களுக்குரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுத்த வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுடைய பெயர் விவரங்களும் பதிவு செய்யப்படுதல் அவசியமாகும். இந்த நிலைமைக்கு மேலதிகமாக அத்தியாவசிய தேவைகளுக்காக பயணத்தில் ஈடுபடுபவர்கள் அதாவது வெளி மாவட்டங்களுக்கு பயணிப்போர், அரச உத்தியோகத்தர்கள், தொழில்ரீதியாக வெளி மாவட்டத்திற்கு செல்பவர்களும் சுயதனிமைப் படுத்தலிருந்து விலக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே அத்தியாவசிய சேவைகள் ஈடுபடுவர்கள் மற்றும் தொழில் ரீதியாக அடையாள அட்டையுடன் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருபவர்களும் சுயதனிமைப் படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவ்வாறானவர்களுக்கு தனிமைப்படுத்தல் நிறுத்தப்பட்டுள்ளது. தொழில் நிமித்தம் வெளி மாகாணங்களுக்கு சென்று வருபவர்களுக்கும் இந்த நடைமுறை செயற்படுத்தப்படும். அதே நேரத்தில் அதிகூடிய அபாய பிரதேசத்தில் இருந்து வருபவர்கள் அவர்களுடைய நிலைமை குறித்து சுகாதார பிரிவினரின் அறிவறுத்தலின் படிசெயற்படலாம். தமது விபரங்களை தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவையா இல்லையா என்பது தொடர்பில் சுகாதார பிரிவினர் ஆலோசனை வழங்குவார்கள். வெளி மாகாணத்திலிருந்து உத்தியோக நிமித்தம் கடமை நிமித்தம் வந்து செல்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை எனவே இந்த விடயங்களை அனுசரித்து பொதுமக்களும் உத்தியோகத்தர்களும் ஏனைய அமைப்புகளும் நடந்துகொள்வது அவசியமாகும். விழாக்கள் மற்றும் திருமணம் நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டலுக்கமைய வீடுகளிலேயே செயற்படுத்தப்பட வேண்டும் மண்டபங்களிலும், ஆலயங்களிலும் திருமண நிகழ்வுகளை அல்லது ஏனைய நிகழ்வு தற்போது செயற்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை அனுசரித்து எதிர்வரும் காலங்களில் இதற்குரிய அனுமதி பரிசீலிக்கப்படும் இந்த தீர்மானங்கள் அனைத்தும் தேசிய மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாழ் மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய கொள்கைக்கு இணங்க அதற்குரிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் இந்த தளர்வுகளை பொதுமக்கள் தகுந்தவாறு பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும்.
யாழ்ப்பாண மாவட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு பொதுமக்களுடைய பங்களிப்பே முக்கியமான காரணமாகும் அத்தோடு சுகாதார திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் ஒத்துழைப்பும் எமது யாழ் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு ஒரு காரணமாகும். எனவே ஒரு சிலர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் போது அது அனைவருக்கும் ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடும் எனவே அனைவரும் பொறுப்பாக செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.