யாழிலிருந்து கொழும்பிற்கு 1.8 மில்லியன் ரூபாய் கஞ்சா கடத்திய இருவர் வவுனியாவில் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு சுமார் 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகளை கடத்தி செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று ஈரப்பெரியகுளம், குருந்துபிட்டிய பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கெப்பத்திகொல்லாவ விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர். இதன்போது காரினுள் பொதி செய்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 43, 48 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், தெமட்டகொட பகுதியில் வசிப்பவர்கள் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.