மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் தமது அபாரமான திறமையை வெளிக்காட்டி முதலாமிடத்தைப் பெற்றனர்.
வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினரால் மாவட்ட அணிகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டிகள் முல்லைத்தீவு உள்ளக விளையாடரங்கில் நடைபெற்றது.
இவ்வாண்டு முதன்முறையாக பெண்களுக்கான மல்யுத்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முல்லைத்தீவு மாவட்ட அணி 09 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளிப் பதக்கங்கள் உட்பட 14 பதக்கங்களை பெற்று முதலாமிடத்தையும், வவுனியா மாவட்ட அணி ஒரு தங்கப் பதக்கத்தை பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட அணி 8 தங்கம் மற்றும் 9 வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் உட்பட 22 பதக்கங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி முதலாமிடத்தையும், வவுனியா மாவட்ட அணி 4 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள், உட்பட 11 பதக்கங்களை பெற்று இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாண மாவட்ட அணி ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 3 பதக்கங்களை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கேடயங்களை வழங்கி வைத்தார்.