மகளிர் தினத்தில் ஆஷிகாவிற்கு கெளரவம்
தேசிய அபிவிருத்தி வங்கியால் வடக்கின் சாதனை மங்கை செல்வி. விஜயபாஸ்கர் ஆஷிகாவிற்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) இலங்கையில் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கிய மங்கைகளை கெளரவிக்கும் நிகழ்வு இன்று கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெற்றது. இதில் விளையாட்டு துறையில் சாதனை படைத்தது வரும் செல்வி விஜயபாஸ்கர் ஆஷிகா வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டார். வடக்கின் தாரகை எனும் விருதினை இரு தடவைகள் பெற்ற ஒரே ஒரு மங்கை எனும் சிறப்போடு, தனது 13 வயதிலிருந்து இன்று வரை பளுதூக்கலில் தனக்கென முத்திரையைப் பதித்தவர். இவர் கடந்தாண்டு நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், கொமன்வெல்த் போட்டியில் பங்கு பற்றி பதக்கம் பெற்ற வீராங்கனை. இவர் அகில இலங்கை பாடசாலைகளுக்கு தேசிய மட்டப் போட்டிகள், யூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள், சிரேஷ்ட பிரிவினருக்கான சம்பியன்ஷிப் போட்டிகள் என அனைத்து போட்டிகளிலும் கடந்த 7 வருடங்களாக தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளார். அத்துடன் கடந்தாண்டு அனைத்து விளையாட்டு வீராங்கனைகளிலும் சிறந்த வீராங்கனை என தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதி விருது பெற்ற ஒரேயொரு வடமாகாண தமிழ் வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது.