Fri. May 17th, 2024

பாடசாலைகளை விரைவில் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் வகுக்கும் திட்டம்

பாடசாலைகளை விரைவில் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான உறுதியான திகதியொன்று தீர்மானிக்கப்படாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதற்காக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து வழிகாட்டல்களை வழங்கியுள்ளன.

இந்த வழிகாட்டல்களின் அடிப்படையில் மாகாண மட்ட கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

அத்துடன், நான்கு கட்டங்களில் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டம் 01 –

மாகாண மட்ட நிறுவனங்களுடன் இணைந்து பெற்றோரின் பங்களிப்புடன் பாடசாலைகளில் தொற்றுநீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இதன் பின்னர் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் படி நான்கு நாட்கள் பாடசாலை மூடி வைக்கப்படும்.

கட்டம் 02 –

கல்விசாரா ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு வருகை தர வேண்டும்.

கட்டம் 03 –

உயர்தர மாணவர்கள் மற்றும் சாதாரண தர மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர வேண்டும்.

கட்டம் 04 –

சிறுவர்கள் பாடசாலைக்கு வர வேண்டும்

மேலதிக வழிகாட்டல்கள்:

முதல் வாரம் பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் மாத்திரம் வருகை தந்து பாட அட்டவணையை தீர்மானிக்க வேண்டும்.
ஒரே வகுப்பில் 52 பேர் காணப்பட முடியாது. சமூக இடைவெளி பேணப்பட வேண்டும். சிறுவர்கள் தற்போதைக்கு பாடசாலைக்கு வரமாட்டார்கள் என்பதால் அதற்கு ஏற்றவாறு வகுப்புகளை பயன்படுத்தக் கூடிய வகையில் பாட அட்டவணைகளை தீர்மானிக்கலாம்.

ஆசிரியர்கள் அனைவரும் அந்த வாரம் பாடசாலைக்கு வருவார்கள். அவர்கள் இந்த பாட அட்டவணையை தயாரிப்பார்கள். அதன் பின்னர் அடுத்த வாரம் உயர்தர மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள்.

பாடசாலை இடைவேளை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்பட மாட்டாது.
கட்டம் கட்டமாகவே பாடசாலை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படும்.

தேவைப்பட்டால் வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலையை நடத்த முடியும்.
ஆனால் ஆசிரியர்களோ, மாணவர்களோ ஏழு நாளும் வர வேண்டியதில்லை.

வாரத்தின் நான்கு நாட்கள் மாத்திரம் வருகை தரக்கூடிய அடிப்படையில் பாட அட்டவணையை வடிவமைக்க முடியும்.

கைகழுவும் நீர்க்குழாய்களை பொருத்துதல்
கையால் திறக்கக்கூடிய வகையில் அல்லாமல் காலால் அழுத்தி திறக்கக் கூடிய வகையிலான நீர்க்குழாய்கள் பொருத்தப்படும்.

இது அரசாங்கத்தின் செலவில் மேற்கொள்ளப்படும்.

50 மாணவர்கள் உள்ள பாடசாலைக்கு ஒன்று – 200 மாணவர்கள் உள்ள பாடசாலைக்கு இரண்டு என்ற வகையில் தீர்மானிக்கப்படும்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ படுக்கை (அம்பியூலன்ஸ் படுக்கை) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் 50 வீதத்துக்கும் அதிகமான பாடசாலைகளின் மொத்த மாணவர் எண்ணிக்கை 200க்கும் குறைவானவை.
இவை பெரும்பாலும் கஷ்டப் பிரதேச பாடசாலைகள்.

இவற்றை முழுமையாக ஆரம்பிக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்பட்டால் அது குறித்தும் ஆராயப்படும்.

இறுதியாக, மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்த பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்