பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தின் முன்மாதிரியான செயற்பாடு
பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். வைத்தியசாலையின் கிளினிக் நோயாளர்களுக்கான மாதாந்த மருந்துகளை வைத்தியசாலைகளிடமிருந்து பெற்று நோயாளர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் பணியை அஞ்சல் திணைக்களம் பொறுப்பெடுத்துள்ளது. வடமாகாணத்தில் முதன் முதலாக தமது விழிப்புணர்வு கலந்துரையாடலையும், அறிவுறுத்தல்களையும் பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் செய்துள்ளது. நேற்று (6) வெள்ளிக்கிழமை காலை பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தில் இச்செயற்பாடு நடைபெற்றது. பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தின் பிரதம அஞ்சல் அதிபர் அ.அருளானந்தசோதி தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வே.கமலநாதன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு இந்நடை முறைகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன் இச்செயன்முறையின் போது எவ்விதமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. பொதுமக்களின் நலன்கருதி இப்பணியை சேவைமனப்பாங்குடன் செய்ய முன்வந்த தபால் திணைக்களத்துக்கு வைத்தியசாலை சமுகம் சார்பாக எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தெரிவித்தார்.