மயிலேறும்பெருமாள் ஞாபகார்த்தமாக பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகம் நடாத்தும் வடமராட்சிக்கு உட்பட்ட கழகங்களிற்கு இடையிலான கால்பந்தாட்ட தொடரில் கொலின்ஸ் அணி அரைையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் காலிறுதியாட்டம் நேற்று பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
காலிறுதியாட்டதில் குஞ்சர்கடை கொலின்ஸ் அணியை எதிர்த்து அண்ணாசிலையடி விளையாட்டுக் கழக அணி மோதியது.
இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். ஆனால் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கொலின்ஸ் அணி வீரர் கிருஷாந்தன் தனக்கு கிடைத்த பந்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி முதலாவது கோலைப் போட்டு அசத்தினார். இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் கொலின்ஸ் அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் அண்ணாசிலையடி விளையாட்டு கழக வீரர்கள் புதிய உத்வேகத்துடன் களம் இறங்கினர்.
9வது நிமிடத்தில் கொலின்ஸ் அணி வீரரால் அடிக்கப்பட்ட பந்தை
அண்ணாசிலையடி அணி வீரர் சிந்துஜன் பந்தை தடுத்தவண்ணம் கோலாக்கி கோல்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக் கட்டத்தை எட்டியது. அதன் பின்னர் இரு அணிகளும் பலமுறை முயற்சித்த போதும் கோல் எதனையும் போட முடியவில்லை. இறுதியில் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் குஞ்சர்கடை கொலின்ஸ் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.