திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக வவவுனியா வந்த பேரணி
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மாபெரும் பேரணி இன்று 2 ஆவது நாளாகவும் மக்களின் ஆதரவுடன் இடம்பெற்றது.
இன்றையதினம் திருகோணமலையில் இருந்து ஆரம்பமாகிய இந்த பேரணி நிலாவெளி, திரியாய், புல்மோட்டை, தென்மரவடி, மணலாறு, செம்மலை நீராவியடி, அளம்பில் உடுப்புக்குளம், சிலாவத்தை முல்லைத்தீவு நகர், வட்டுவாவல் பாலம், முள்ளிவாய்க்கால் நினைவிடம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், நெடுங்கேணி வழியாக வவுனியாவை சென்றடைந்தது.
இந்நிலையில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்ற மபொரும் மக்கள் எழுச்சிப் பேரணி நாளையதினம் வவுனியாவில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய பேரணியில் பெருமளவான மக்களின் ஆதரவுடனும் பங்களிப்புடனும் இடம்பெற்ற நிலையில், தமிழ் அரசியல் பிரமுகர்கள், கத்தோலிக்க மற்றும் இந்து மத துறவிகள் மற்றும் முஸ்லிம் மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பேரணியாக சென்றவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியும் சென்றிருந்தார்கள்
இதேவேளை, படையினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்றையதினமும் குறித்த பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் வாகனங்களுக்கு எதிராக பாதைகளில் ஆணிகள் போடப்பட்டு தடைகள் ஏற்படுத்தி வருவதாகவும் தெரியவருகிறது