சர்வதேசமே நீதியை பெற்றுத்தரவேண்டும்!! -காணாமல் போனோரின் உறவுகள் ஜெனிவாவில் கோரிக்கை-
பொறுப்புக்கூறலிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துவிட்டது. எனவே இனியாவது சர்வதேச சமூகம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் ஜெனிவாவில் தெரிவித்தனர்.
ஜெனிவா பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவருகின்ற நிலையில் ஜெனிவா வந்துள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று நடைபெற்ற உப குழுக் கூட்டம் ஒன்றில் தெரிவித்தனர்.
சங்கத்தின் தலைவி யோகராஜா கனகரஞ்சனி மற்றும் செயலாளர் லீலாதேவி ஆனந்தராஜா சங்கத்தின் மட்டு மாவட்ட தலைவியும் வடக்கு கிழக்கு உப தலைவியுமான அமலராஜ் அமலநாயகி ஆகியோரே இம்முறை ஜெனிவா வந்துள்ளதுடன் இலங்கை குறித்த உபகுழுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.
அவர்கள் நேற்று மேலும் கருத்து வெ ளியிடுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் நீதியை பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். சர்வதேசம் இனியாவது எமக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும்.
இலங்கை தொடர்பான பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்துள்ளது. எனவே இனியாவது சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று எமக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டியது அவசியமாகும். காணாமல் போனோர் குறித்த அலுவலகத்தை நாங்கள் நம்பவில்லை.
கடந்த அரசாங்கமும் எம்மை ஏமாற்றியது. தற்போதைய அரசாங்கம் நேரடியாகவே கூறிவிட்டது. எனவே குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விடயத்தை கொண்டுசெல்லவேண்டும்.
காணாமல் போனோர் இறந்துவிட்டனர் என்று கூற முடியாது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களை மீட்டுத்தரவேண்டும். இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை புரியவேண்டும் என்றனர்.