கோரோனோ சந்தேகத்தில் தனிமை படுத்தப்பட்ட வயோதிப பெண் மரணம்
கேகாலை – அரநாயக்க பகுதியில் கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை வீரரின் பாட்டி என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த பாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றிய படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியானதைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களில் குறித்த படைச் சிப்பாயின் பாட்டியே அரநாயக்க பகுதியில் உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும் உயிரிழந்த வயோதிப் பெண் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த கடற்படை சிப்பாய் கடந்த மாதம் 22 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு சென்று 27 ஆம் திகதி மீண்டும் வெலிசறை கடற்படை முகாமுக்கு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் குறித்த சிப்பாய்க்கு கடந்த 28 ஆம் திகதி கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது