Wed. May 15th, 2024

கொரோனா தாக்கம் கொழும்பு மாவட்டம் முதலிடம் 

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 13 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் கொழும்பு மாவட்டம் முதலிடத்தில்  உள்ளது.
இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி  அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி, குருணாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்தே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு  மாவட்டத்தில் இதுவரை 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 17 பேரும், புத்தளம் மாவட்டத்தில்12 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மேலும் நால்வருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்த்து இதுவரை 117 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு நேற்றிரவு அறிவித்துள்ளது. அவர்களில் இருவர் வெளிநாட்டவர்களாவர்.
அதற்கமைய கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் 95 பேரும், வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் 09 பேரும், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது எனவும், அவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 21 வைத்தியசாலைகளில் 5 வெளிநாட்டவர்கள் உட்பட 117 பேர் கொரோனாத் தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் கூறியுள்ளது.
அடுத்து வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்று பரவும் வேகம் இலங்கைக்குள் அதிகரிக்கலாம் எனும் சந்தேகம் நிலவும் நிலையில், ஊரடங்குச் சட்டக் காலப்பகுதியில் அனைவரையும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே தனிமைப்பட்டிருக்குமாறு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்