காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையம் தொடர்பாக இராணுவத்தளபதியின் விளக்கம்
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களை ஒன்றாக வைத்திருந்தமையால்தான் அங்குள்ள ஏனையோருக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற வாதத்தை நாம் நம்பத் தயாரில்லை. வடக்கில் கொரோனா பரவுவதற்கு சுவிஸ் மத போதகர்தான் காரணம்.”
– இவ்வாறு இராணுவத் தளபதியும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் யாராவது ஒருவருக்குக் கொரோனா ஏற்பட்டாலும் அங்குள்ள ஏனையோருக்கும் பரவும் நிலையிலேயே தனிமைப்படுத்தல் நிலையம் காணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் பொழுதே இதனை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் இராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் இயங்குகின்றன. இராணுவத்தினர் இதனை நடத்துவதனால், இராணுவத்தினர் மீது ஏற்கனவே விமர்சனங்கள் இருப்பதனாலும், இப்படியான குற்றச்சாட்டுக்கள் வரும் என்று நாம் எதிர்பார்த்தோம்.
இத்தகைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களின் பொறுப்பு இராணுவ அதிகாரிகளை ஆராயப் பணித்துள்ளேன். அத்துடன் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களை ஒன்றாக வைத்திருந்தமையால்தான் அங்குள்ள ஏனையோருக்கும் கொரோனா தொற்று பரவியது என்ற வாதத்தை நாம் நம்பத் தயாரில்லை. வடக்கில் கொரோனா பரவுவதற்கு சுவிஸ் மதபோதகர்தான் காரணம்” – என்றார்.