வாரத்தின் இரு நாட்கள் ஆசிரியர் லீவு தொடர்பான அறிவித்தல் – சரா புவனேஸ்வரன்
போக்குவரத்தில் இடர்படும் ஆசிரியர்கள் வாரத்தில் இரு நாட்கள் பாடசாலைக்குச் செல்லத் தேவையில்லை என்பதுடன் குறித்த விடயம் தொடர்பாக அதிபருக்கு அறிவித்து அதன் பிரதி ஒன்றையும் வைத்திருக்குமாறு இலங்கை தமிழர் ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் 5நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தூர இடங்களில் இருந்து பாடசாலைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கான எரிபொருள் சலுகைகள் எவையும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் அனைவரைப் போன்றே கியூஆர் பயன்படுத்தி பெற்றோலைப் பெறுகின்றனர். இதனால் 5 நாட்களும் பாடசாலைக்குச் செல்வதற்கு போதாமல் உள்ளது. இது தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இதில் குறித்த இடர்படும் ஆசிரியர்கள் போக்குவரத்து சீரின்மைக்கான காரணத்தை குறிப்பிட்டு, அதிபருக்கு தெரியப்படுத்தி அதில் ஒரு பிரதியும் பேணப்பட வேண்டும். இந்த மேலதிக இரண்டு நாட்களும் குறித்த ஆசிரியருக்கு விடுமுறையாக கருதப்பட மாட்டாது. அதிபர்கள் தமது தேவைகளுக்காக லீவு புத்தகத்தில் பதிவினை மேற்கொள்கிறார்கள். அதை நினைத்து எவரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டாம். எனினும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு லீவு கோரும் ஆசிரியர் பயிற்சிச் செயற்பாடுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.