விடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை பிரதேசச் செயலாளர் தனியார் நபர்களுக்கு வழங்கி குறித்த இடங்களில் நிறந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக விடத்தல் தீவு மேற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த விடையம் தொடர்பாக விடத்தல் தீவு மேற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கம் நேற்று சனிக்கிழமை (6) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
விடத்தல் தீவு கிராமத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை பிரதேசச் செயலாளர் தனியார் நபர்களுக்கு வழங்கி குறித்த இடங்களில் நிறந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த செயற்பாட்டினால் எமது கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
மேலும் எமது கிராமத்தில் வசிக்காத நபர்களுக்கும் குறித்த பகுதிகளில் காணி வழங்கப்பட்டு கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையின் காரணமாக எமது கிராமம் பாதீப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே எமது கிராமத்தில் உள்ள குறித்த காணி வளங்களை எமது கிராமத்தின் வளர்ச்சிக்காக பயன் படுத்துவதற்கும், தொழிலாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து அவர்கள் இடையூறுகள் இன்றி அவர்கள் தொழிலை மேற்கொள்ளுவதற்கும், எமது கரையோர பகுதிகளை அண்டிய காணிகளை எமது சங்கத்தின் பொறுப்பில் பரமாறிக்கும் வகையில் ஆவணம் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடையம் தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனை வினவிய போது,,,,.
குறித்த பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக மீன் வாடிகள் காணப்பட்டது.தற்போது புதிதாக வந்த சிலர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயன்று வருகின்றனர்.
சட்ட அடிப்படையில் காணிக்கான முழு அதிகாரமும் பிரதேச செயலகத்திற்கே உள்ளது.
கடற்கரையை அண்டிய பகுதியாக இருந்தால் பிரதேசச் செயலகத்தினால் ஒரு வருடத்திற்கு குத்தகை என்ற அடிப்படையில் கொட்டு வாடி அமைக்க வழங்க முடியும்.
நிறந்தர கட்டிடம் அமைக்க முடியாது. ஆனால் தற்போது குறித்த பகுதியில் நிறந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக எனக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை.
பிரதேசச் செயலகத்திற்கு குறித்த காணியின் அதிகாரம் காணப்படுகின்றமையினால் கடல் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்தே நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.வருட குத்தகைக்கு வழங்க முடியும்.ஆனால் குறித்த பகுதியில் நிறந்தர கட்டிடங்கள் எவையும் அமைக்க முடியாது.