Wed. May 15th, 2024

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறாா் சீ.வி.விக்னேஸ்வரன்..!

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாம் பதவிநீக்கம் செய்யப்பட்டமை சட்டரீதியானது அல்ல என்று முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனு க்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 05.08.2019ஆம் திகதி வெளியிடப்பட்டதும் அது பற்றிய எமது கருத்துக் கேட்கப்பட்டபோது அதன் மீது கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்க விரும்புவதாக கூறிவந்தேன்.

மேற்கண்டவாறு வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா். மேற்படி விடயம் தொடா்பாக இன்று காலை அவருடைய இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், ஆனால் இப் பொழுது இந்த விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தொடர்புபடுத்தி விமர்சனங்கள்

செய்யப்படுவதனால் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அவைத் தலைவர் என்ற முறையில் மட்டுமன்றி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் என்ற வகையி லும் எனக்கு உண்டு என்ற வகையில் எமது கருத்தைத் தெரிவிக்க விரும்புகின்றேன். 2013 செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட யாவரும் இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம்

1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மகாண சபைகள் சட்டம், மாகாண சபைகள் தேர்தல் சட்டம் போன்றவற்றைத் தெரிந்துகொண்டுதான் போட்டியிட்டனர். இதன் அடிப்படையிலேயே 38 உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபைக்கு த் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களில் எவரும் தமக்கு இந்தச் சட்டங்கள் பற்றித் தெரியாது என்று கூறிவிடமுடியாது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் வலுவற்றது என்பது இப்பொழுதுதான் தெரியவந்தவிடயமல்ல.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை இது பூர்த்திசெய்யவில்லை என்று ஏற்கனவே நாம் எல்லோருமே கூறியிருப்பது ஒரு பொதுவான விடயம். ஆனால் அமைச்சர்கள் நியமனம் தொடர்பான ஏற்பாடுகள் தெளிவானது. இதனைத் தெரிந்துகொண்டுதானே செயற்படவேண்டும். நீதிமன்றம் கூட அமைச்சரை முதலமைச்சர் நீக்கமுடியாது என்று கூறவில்லை. அதனை சட்ட ஏற்பாட்டின் படி முறைப்படியாகச் செய்யலாம் என்றே கூறியுள்ளது.

அரசியல் அமைப்பின் உறுப்புரை 154 ஊ (5) பின்வருமாறு கூறுகின்றது. “ஆளுநர் பிரதான அமைச்சரின் ஆலோசனையின் மீது அம்மாகாணத்துக்கென அமைக்கப்பட்ட மாகாண சபையின் உறுப்பினர்களில் இருந்து ஏனைய அமைச்சர்களை நியமித்தல் வேண்டும்” இதற்கமைத்தானே முதலமைச்சர் சகல அமைச்சர்களின் நியமனங்க ளையும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கி மேற்கொள்வித்தார்.

டெனீஸ்வரன் தவிர்ந்த ஏனைய அமைச்சர்களின் பதவி நீக்கம் அல்லது பதவி விலகல் தொடர்பாகவும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியே மேற்கொள்ளப்பட்டன. அப்பொழுதெல்லாம் அமைச்சர்களை நியமிக்க அல்லது நீக்க முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று தெரியவில்லையா என்’ற கேள்வி இயல்பாக எழுகிறதே. இந்த விடயத்தில் இந்திய அரசியல் அமைப்பின் உறுப்புரிமை 164 (i) அச்சொட்டாக

இதேவார்த்தைகளையே கொண்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரிலேயே அமைச்சர்களை நியமிக்கலாம் என்ற ஏற்பாடு ஆண்டாண்டு காலமாக இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. அதுவே இந்த நாட்டின் அரசமைப்பிலும் உள்ளது. மாகாண சபைகள் சட்டம் தொடர்பாகப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இந்தக் கட்டமைப்பு பற்றிய சட்ட ஏற்பாடுகள் மிகப்பெரும்பாலானவை இந்திய அரசமைப்பின்

மீள்பதிப்பாகவே இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இரு நாட்டுச் சட்டங்களின் படியும் ஆளுநரை ஜனாதிபதி நியமிக்கிறார். ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார். அமைச்சர்களை முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் நியமிக்கிறார். அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக அது இருதரப்பு இணைந்த செயற்பாடு என்பதை சபைக் கூட்டங்களிலே நான் தெளிவுபடுத்தியிருக்கின்றேன்.

நியமன அதிகாரம் ஆளுநருக்கே உண்டு. ஆனால் அவர் அதனைச் தன்னிச்சையாகச் செய்யமுடியாது. முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரிலேயே நியமிக்க முடியும். நியமன அதிகாரத்துக்கும் ஆலோசனை அதிகாரத்துக்கும் உள்ள வேறுபாடு தெளிவானது. ஆலோசனை வழங்கும் அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு. அதன்படி முன்வைக்கும் ஆலோசனையை ஆளுநர் ஒரு முறை மீள்பரிசீலனைக்கு அனுப்பலாம்.

ஆனால் அதையே முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்தினால் ஆளுநர் முதலமைச்சரின் ஆலோசனையின் படி செயற்படுவது கட்டாயமானது என்பது இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகவே முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவிலித்தனமாகும். அமைச்சர்களின் நியமனம் மற்றும் பதவி நீக்கம் பற்றி ஆளுநருக்கு ஆலோசனை வழங்கவேண்டிய முதலமைச்சர்

தாமே நேரடியாக சட்டத்துக்கு முரணாக பதவி நீக்கத்தை மேற்கொண்ட நிலையில் பார்த்தீர்களா அமைச்சர்களை நீக்கக்கூட முதலமைச்சருக்கு அதிகரமில்லை என்று கூறுவது அர்த்தமற்றது. முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்பிய பதவிநீக்கல் கடிதத்தை வர்தமானியில் பிரசுரிக்காதமை தவறு என்கிறார். ஆனால் வர்தமானி பிரசுரிப்பு ஆளுநர் பின்வரும் நியமனங்களை தான் செய்துள்ளதாக இத்தால் தெரியப்படுத்துகிறேன் என்றே உள்ளது.

ஆகவே நியமனம் ஆளுநரால் செய்யப்பட்டால் மட்டுமே வர்த்தமானி பிரசும் எழும். மேலும் நியமனம் அல்லது பதவி நீக்கம் என்பது சம்பந்தப்பட்டவருக்கு எழுத்து மூலம் ஆளுநரால் வழங்கப்படவேண்டியது என்பதையும் நான் சபையிலே சுட்டிக்காட்டியிருக்கிறேன். எனவே அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்ற வாதம் விதண்டாவாதம். நிச்சயமாக முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் உண்டு.

ஆனால் அது ஆளுநர் ஊடாக நிறைவேற்றப்படவேண்டும் என்பதே ஏற்பாடு. இந்தியாவிலும் இதுதானே நடைமுறை. இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தவறு எங்கே இருக்கின்றது. ஏதோ 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் வரைந்து நிறைவேற்றியது போன்று தவறான கருத்தை விதைக்க முயல்வது கண்கூடு. எமது மக்கள் உண்மை நிலையைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

சட்ட ஏற்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதே விடயப்பொருளாக நீதிமன்றத் தீர்ப்புக்கு உள்ளாகியது. அதற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் என்ன சம்பந்தம். மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது மாதியானதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டுதலாகும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்