போதை மாத்திரையுடன் மாணவன் கைது!!
பாடசாலை மாணவர் ஒருவர் போதை மாத்திரையுடன் விசேட அதிரடிப்படையினரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் வைத்து மருதமுனையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரம் கலைப்பிரிவில் கல்விப்பயிலும் அப்துல் ரசாபீ முகம்மட் அச்லம் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு கைதானார்.
மருதமுனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் கைதான மாணவனிடமிருந்து 1050 ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மாணவனை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகளவான போதை பாவனை காணப்படுவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.