பொலிஸாருடன் முரண்பட்ட இருவரை முழங்காலில் அமர்த்தி இராணுவம் தண்டனை
பொலிஸாருடன் முரண்பட்ட இருவரை முழங்காலில் அமர்த்தி இராணுவம் கொடுமைப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ். மருதனார்மடம் சந்தியில் நேற்று வியாழக்கிழமை(14/5) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். மருதனார்மடம் சந்திக்கு அருகில் அமைந்துள்ள முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருவருக்கிடையில் வாக்குவாதம் இடம் பெற்றது. வாக்குவாதம் திடீரென முற்றிக் கைகலப்பாக மாறிய நிலையில் அங்குநின்ற பொலிஸார் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதன்போது அவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவதானித்த அங்கு நின்ற இராணுவத்தினர் குறித்த இரு நபர்களையும் தாக்கியுள்ளதுடன் முழங்காலில் அமர்த்தியும் கொடுமைப்படுத்தியுள்ளது. இதனையடுத்து இருவரும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அண்மையில் கொழும்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியோரை முழங்காலில் இருக்கவிட்ட நிலையில், பொலிஸார் இருவருக்கும் தற்காலிகமாக வேலை பறிபோனது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சட்டத்தின் படி தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது