Wed. Jun 26th, 2024

நாளை வடமாகாண பாடசாலைகள் நடைபெறும், புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் ஆரம்பம் – வடமாகாண கல்வி பணிப்பாளர் அறிவிப்பு

நாளை செவ்வாய்க்கிழமை முதல் வடமாகாண பாடசாலைகள் நடைபெறும் எனவும் புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை முதல் ஆரம்பமாகும் என வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. எனினும் வடமாகாண காலநிலையை கருத்தில் கொண்டு நாளை பாடசாலை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.
அத்துடன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த மாணவர்களுக்கான க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்தல் செயற்பாடும் நாளை ஆரம்பமாகவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரது கடிதத்தின் படி க.பொ.த உயர்தர வகுப்பை 04.06.2024 ஆம் திகதி தங்கள் வலய 1A, 1C பாடசாலைகளில் ஆரம்பித்து மாணவரின் வரவினை தற்காலிகப் பதிவேட்டில் பதிவு செய்து அப்பாடசாலையில் கற்ற மாணவர்களினதும் வேறு பாடசாலையிலிருந்து அப்பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களினதும் விபரத்தை தாங்கள் பெற்று மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளார்.
மாணவர்கள் க.பொ.த உயர்தர பாடத்துறைகளுக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்யப்பட்ட காலப் பகுதியினுள் வருகை தந்த நாட்களின் எண்ணிக்கையானது. க.பொ.த உயர் தர பரீட்சைக்குத் தோற்றும் போது 80% சதவீத வரவுக்காக கருத்தில் கொள்ளப்படும்.
க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர் தரத்தில் கற்பதற்காக வேறு பாடசாலையொன்றிற்கு அனுமதி பெற்றுக் கொள்ளும் போது இந்த தற்காலிக இணைப்புக்கு அமைய ஏதேனும் ஒரு பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டு கற்றிருப்பது முன்னுரிமை வழங்கப்படும் விடயமாக கருத்தில் கொள்ளப்படும்.
அதன் படி, மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் படி வேறு பாடசாலையொன்றிற்கு அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்களில், இணைப்புக் கால எல்லையினுள் பாடசாலை வரவு மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையொன்றை, தற்காலிகமாக இணைப்பு பெற்றுள்ள பாடசாலை அதிபர்கள் வழங்க நடவடிக்கையெடுத்தல் வேண்டும் என்பதுடன் அதனை மேலதிக தகுதியொன்றாக கருத்தில் கொள்ள வேண்டும்.
அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்காகவும் இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
அத்துடன் மேற்படி 20/2024 சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வசதிகள் மற்றும் சேவைகள் கட்டணம், சீருடைகள் மற்றும் மாணவர் விடுகைப் பத்திரம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த தடவடிக்கையெடுத்தல் வேண்டும் எனவும் வடமாகாண கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்