கந்தரோடை மடத்தடியில் நேற்று காலை இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை
யாழ். சுன்னாகம் கந்தரோடை மடத்தடியில் நேற்றுச் சனிக்கிழமை(16/5) காலை இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சசிதரன்(வயது-26) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் கந்தரோடையைச் சேர்ந்த பெண்ணொருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலித்து வந்த பெண் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால், மேற்படி இளைஞன் ஒருவித மனவிரக்தியிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த இளைஞனின் தாயாரும், தகப்பனும் கந்தரோடையிலுள்ள வயலுக்குச் சென்ற சமயம் பார்த்துக் குறித்த இளைஞன் வீட்டு அறையில் வெட்சீட்டைப் பயன்படுத்தித் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
நேற்றுக் காலை- 09 மணியளவில் குறித்த வீட்டிற்கு அண்மையில் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் இளைஞனின் சகோதரி மேற்படி வீட்டிற்கு வருகை தந்து மீண்டும் மீண்டும் அழைத்த போது யாரும் பதில் வழங்கவில்லை.
இதனால், சந்தேகமடைந்த சகோதரி வீட்டு யன்னல் ஊடாக அவதானித்த போது சகோதரன் தூக்கிட்டுள்ளமையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து சகோதரி எழுப்பிய அவலக் குரலில் ஊரவர்கள் அப் பகுதியில் திரண்டுள்ளனர். சடலம் மீட்கப்பட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் நேற்று நள்ளிரவு-12 மணியளவில் சடலம் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுன்னாகம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.
இதேவேளை, இன்று ஞாயிற்றுக்கிழமை(17/5) மேற்படி இளைஞனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.