கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்கையில் இரு பெண் பொலீஸார் பிரதேச வாசிகளால் தாக்குதல்
பண்டாரகம – அளுத்கம பகுதியில் பிரதேச வாசிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய இரண்டு பெண் பொலிஸார் உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
அளுத்கம மாராவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும்போது பொலிஸ் வாகனத்தை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது இரண்டு பெண் பொலிஸார் உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். அதன் பின்னர் கலகம் அடக்கும் பொலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கலகத்தை அடக்கி சம்பந்தப்பட்டவரை பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.