இரண்டாக பிரிப்படவுள்ள தென்னமராட்சி பிரதேச செயலகம்
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச செயலகம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனால் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன்படி, தென்மராட்சி பிரதேச செயலகமானது கொடிகாமம் பிரதேச செயலகமாகவும் சாவகச்சேரி பிரதேச செயலகமாகவும் இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி பிரதேச செயலக விவகாரம் தொடர்பில், 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி அங்கஜன் இராமநாதனினால் உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய பிரதேச செயலகத்துக்கான ஆரம்பப் பணிகள் மற்றும் ஆளணிகள் குறித்த விடயங்களை யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் நிறைவு செய்த பின்னர் இந்த வருட நடுப்பகுதி முதல் புதிய பிரதேச செயலகம் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.