31ம் திகதி முதல் 5 நாட்களுக்கு மழை
தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது மேலும் விருத்தியடைந்து எதிர்வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் எதிர்வரும் 31.01.2023 தொடக்கம் 04.02.2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
( சிறிய அளவிலான மழை 29.01.2023 இலிருந்தே ஆரம்பிக்கலாம்)
எனவே அறுவடை செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் மழையை எதிர்கொள்வதற்கான போதுமான தயார்ப்படுத்தலுடன் அறுவடையை மேற்கொள்வது சிறந்தது. அத்துடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மற்றும் வவுனியா மாவட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உலர் வைக்கும் செயற்பாட்டினை இக்காலத்தில் தவிர்ப்பது சிறந்தது. அல்லது மழையிலிருந்து நெல்லை பாதுகாக்கும் ஏற்பாடுகளோடு உலர வைப்பது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-நாகமுத்து பிரதீபராஜா-