வழமைபோல் பாடசாலை பெற்றோர் விசனம்
தீவக பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டம் நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலர் தலைமையில் நடைபெறும் எனவும் தெரியவந்துள்ளது. தீவக பகுதியில் கொரோனா தொற்றாளர் பல இடங்களில் நடமாடி சமூகத் தொற்றுக்கு வழிகோலியுள்ளது. பலரிடத்திலும் நாளை தீவக பாடசாலைகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கையிலேயே தீவக பாடசாலைகள் நடைபெறும் எனவும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இருப்பினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், சமூக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாடசாலைகளுக்கு அனுப்புவதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட புயல் மற்றும் கடும் மழை ஏற்படும் என வளிமண்டலத் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காது நடாத்தி கரையோரப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சென்று பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர். சமூக தொற்றை தடுப்பதற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோருக்கு எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அவர்களை சுதந்திரமாக வரவிட்டு சமூக தொற்று ஏற்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தி தங்களுக்கு அறியத் தாருங்கள் என சுகாதார துறையினர் அறிவிப்பது வேடிக்கையாகவே உள்ளது. சுகாதார துறை போல் தற்போது கல்வி அமைச்சும் செயற்படத் தொடங்கியுள்ளதாக அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.