மொழித் தாண்டலுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் உத்தியோகத்தர்களுக்கான மொழித் தடைதாண்டலுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று (23) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட 150 மணித்தியாலங்களை கொண்ட இரண்டாம் மொழி சிங்களக் கற்கைநெறியை பூர்த்தி செய்த கரவெட்டி மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களிற்கு இச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது “இலங்கையில் பிரதான மொழிகளாக தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகள் காணப்படுகின்றன. அநேகமான அரச நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் சிங்களமொழியை கற்க ஆர்வமாகவுள்ளார்கள். ஆகவே இதற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு மொழியை நாம் கற்கும் போது எமது ஆளுமை அதிகரிக்கிறது. அரச உத்தியோகத்தர்கள் எங்கு சென்றும் பணியாற்றுவதற்கு மொழி பிரதானமானது ஆகும். நீங்கள் மென்மேலும் தொழிற் தேர்ச்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் மூலம் இந் நிகழ்ச்சித்திட்டம் செவ்வேனே மேற்கொள்ளப்படுகிறது” எனவும் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரு.பிரசாத் ஆர் ஹேரத் கலந்துகொண்டிருந்தார். அத்தோடு மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், உதவி பணிப்பாளர் திருமதி.பி.பி.ரவிராஜ் (NILET), கற்கை மற்றும் ஆய்வு உத்தியோகத்தர் திருமதி.எல்.எம்.ஆர்.என். லன்சாகர(NILET), இணைப்பாளர் எச்.எ.எச்.ஹெரோசிமா பெரேரா(NILET) மற்றும் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட செயலக இணைப்பாளர் ( NILET), விரிவுரையாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.