முஸ்லிம் விவாக சட்டத்தை திருத்தியமைக்கவும் – பைஸர் முஸ்தபா
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் குறித்த பிரச்சினைக்கு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.இதனால் இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (02) மாலை இடம்பெற்றது.
“முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடிக்கடி கலந்துரையாடி வந்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்துத் திருத்தச் சட்டம் குறித்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும்,இன்று வரை இவ்விவகாரம் தொடர்பில் எந்தவொரு சட்ட மூலமும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
“இந்த விவகாரம் தொடர்பில் சில நாட்களுக்கு முன்பு, இவ்விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு நான் அவசரக் கடிதமொன்றையும் அனுப்பினேன். அந்தக் கடிதத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு குறித்த பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியிருந்தேன்,அதற்கான சிறந்த பதிலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்”எனவும் கூறியுள்ளார்.