மந்திகை பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை பல உணவகங்கள் சுகாதார நடைமுறைகளை மீறல்
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மந்திகைப் பகுதியை பொதுசுகாதார பரிசோதகர்கள் குழு திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டு
பரிசோதனைக்கு உட்படுத்திய போது சுகாதாரத்திற்கு விரோதமான நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மந்திகை பகுதியில் நேற்று பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினரால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பல உணவு கையாளும் நிறுவனங்களில் சமைத்த, சமைக்காத உணவுகளை ஒன்றாக பேணியமை, பிளாஸ்டிக் தட்டில் இடியப்பம் தயாரிப்பு, ஊழியர் தங்கும் அறையை உணவுப்பொருள் களஞ்சியமாக பேணியமை,
காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை,
காலாவதியான பொருளை காலாவதியாகாத பொருட்களுடன் சூட்சுமமான முறையில் காலாவதி திகதி தெரியாதவாறு இலவச இணைப்பாக இணைத்திருந்தமை,
பூஞ்சணம் வளர்ந்த பனங்கட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தமை
போன்ற சுகாதாரத்துக்கு விரோதமான விடயங்கள் கணடுபிடிக்கப்பட்டன. இப்பொருட்கள் அழிக்கப்பட்டதோடு சட்டநடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதியளவு அறிவூட்டலும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டபோதும் இவ்வாறு பொறுப்பற்றவிதமாக வர்த்தகர்கள் நடந்துகொள்வது சமுகவிரோதச் செயலாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.