Tue. Apr 23rd, 2024

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து நஷ்டஈடு கோரி அங்கஜன் வழக்கு

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து நஷ்டஈடு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது சட்டத்தரணியூடாக கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தை அங்கஜன் இராதநாதன் தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியதாக பேராசிரியர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பில் தன்னுடைய நிலைப்பாட்டினை வலியுறுத்தி அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி இருந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தில் தலையிட்டு தனது ஆதரவாளர்களுக்கு வழங்கினார் என உண்மைக்குப் புறம்பான, அடிப்படை ஆதாரங்களற்ற தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்து தனது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் திட்டமிட்ட விசமப் பிரச்சாரமாகவே தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன உறுப்பினர் ஒருவர் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்களை வலிந்து சந்தித்த பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், பேரிடர் முகாமைத்துவ நிலையத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலர் அங்கஜன் இராமநாதனிடம் கொடுத்தாரென அரசியல்வாதிகளும் வேட்பாளர்களும் தேர்தல் விதிகளை மீறி தமது அரசியல் நோக்கத்துக்காக செயற்படுகிறார் எனவும் தெரிவித்திருந்தார்.

பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட பொருட்கள் எவற்றையும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடமிருந்து அங்கஜன் இராமநாதன் பெறவில்லையென மறுதினமே யாழ் மாவட்ட செயலாளர் மறுத்திருந்தார்.

இந்த அப்பட்டமான பொய்யால் தேர்தல் நெருங்கும் இக் காலகட்டத்தில் மக்கள் மத்தியில் நின்று பணியாற்றும் அவருடைய நற்பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்தபட்டுள்ளதெனவும், இரண்டு கிழமைகளுக்குள் பதிலளிக்காவிடில் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்