பரீட்சை எழுதிவிட்டு திரும்பிய மாணவனை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞர்கள் – நெல்லியடியில் சம்பவம்
பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவனை மோட்டார் சையிக்கிளில் வந்த இரு இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்சற்று முன்னர் நெல்லியடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, வதிரி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த மாணவன் இன்று புதன்கிழமை க.பொ.த.சாதாரண பரீட்சையை வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வதிரி பொது நூலகத்திற்கு முன்னால் மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் குறித்த மாணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர். இதனால் தலையில் வீக்கம் ஏற்பட்ட மாணவன் தனது சகோதரனுக்கு தொலைபேசி மூலம் தான் தாக்கப்பட்டமையையும் மோட்டார் சையிக்கிளில் இலக்கத்தையும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் குறித்த இடத்திற்கு தந்தையும், சகோதரனும் வருகை தந்த போது குறித்த மோட்டார் சையிக்கிளில் பயணித்தவர்கள் நெல்லியடி சந்தி பகுதியில் சிவப்பு மின் விளக்கு ஒளிரப்பட்ட போதிலும், வீதி சமிக்ஞைஞை மீறி மோட்டார் சையிக்கிளை செலுத்தி நெல்லியடி பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது மோட்டார் சையிக்கிளை அடையாளம் கண்டு குறித்த இளைஞர்களையும் நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக குறித்த மாணவன் பரீட்சை எழுதிவிட்டு வதிரி நோக்கி தனது சக மாணவிகளுடன் வருகை தந்த போது, மாணவியைப் பார்த்து மாணவனுடன் மட்டும் கதைக்கிறாய் எங்களுடனும் கதைக்கலாம் தானே என மாணவியை மோட்டார் சையிக்கிளில் வந்தவர்கள் கேட்டதாகவும், இவ்வாறு சக மாணவியுடன் கதைக்க வேண்டாம் என மாணவர்களால் கூறிய போதே மோட்டார் சையிக்கிளில் பயணித்தவர்கள் தலைக்கவசத்தால் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கரவெட்டி இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த இருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.