பரபரப்பான ஆட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன்
கைதடி தெற்கு சன சமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட வொலிபோல் தொடரில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டார்.
யாழ் மாவட்ட அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையிலான வொலிபோல் தொடரின் இறுதியாட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்தி அணி மோதியது.
5 செற்கள் கொண்ட போட்டியில் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர்.
முதல் இரண்டு செற்களிலும் ஆவரங்கால் மத்தி அணி பலத்த போராட்டத்தில் 25:23, 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். அதன் பின்னரான அடுத்த இரண்டு செற்களிலும் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25:18, 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஐத்தாவது செற்றில் இரு அணிகளும் களம் இறங்கின. இதில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 15:09 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.