தம்பாலையில் தொற்று இடைக்காடு மகா வித்தியாலயம் இழுத்து மூடல்
அச்சுவேலி தம்பாலை பகுதியில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதோடு இடைக்காடு மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அச்சுவேலி தம்பாலை பகுதியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரின் சகோதரியான மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, தம்பாலை பகுதியில் இருந்து பல மாணவர்கள் இடைக்காடு மகா வித்தியாலயற்குச் செல்கின்றமையால் அதன் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் இருந்து வருகை தரும் மாணவர்கள் பலர் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி, மற்றும் அச்சுவேலி மத்திய கல்லூரி போன்றவைகள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டே இருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தரம் 9 மற்றும் ஏனைய வகுப்புக்களையும் ஆரம்பிப்பதில் அதிபர்கள் மும்மரம் காட்டி வருகின்றனர். வலயக் கல்வி அலுவலகத்தால் 20 மாணவர்களுக்கு மேற்படாதவாறு சமூக இடைவெளிகளைப் பேணி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து வகுப்புக்களை நடாத்துமாறு உத்தியோகபூரமற்ற முறையில் அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் பாடசாலைகள் இதனைக் கருத்தில் கொள்ளாது சுகாதார நடைமுறைகளை மீறி, அனைத்து மாணவர்களையும் ஒன்றுகூட்டி வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர். தொற்று ஏற்பட்ட பகுதியிலாவது பாடசாலைகளை சிறிது காலம் இடைநிறுத்துவதற்கு சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோப்பாய் சுகாதார பிரிவினர் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் அசமந்தப் போக்கு காட்டி வருவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அப்பகுதி மாணவர்களுடன் தற்போது இயங்கி வரும் அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி, மற்றும் அச்சுவேலி மத்திய கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என்றால் இயங்குவதற்கு அனுமதி வழங்குமாறும், பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அச்சம் காரணமாக அனுப்பாது விடில் பாடசாலை நிர்வாகத்தால் தண்டனைக்கு ஆளாக வேண்டி வரும் எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளார்.