Sat. Apr 20th, 2024

குறைந்த ஆரம்ப கொடுப்பனவுகளில் 7,500 குடும்பங் களுக்கு புதிய வீடுகள்- உடனடியாக ஆரம்பிக்க பிரதமர் பணிப்பு

குறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 7 ஆயிரத்து 500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (14) நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்கள் தொடர்பில் அதிகாரசபையின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே பிரதமர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அதற்கமைய இம்மாத இறுதிக்குள் இந்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஒப்புதல் தெரிவித்தது.

புதிதாக நிர்மாணிக்கப்படும் 07 ஆயிரத்து 500 வீடுகளில், 04 ஆயிரம் வீடுகள் குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிப்போரை மீள்குடியேற்றுவதற்காக நிர்மாணிக்கப்படுவதுடன், எஞ்சிய 03 ஆயிரம் வீடுகள் நடுத்தர வர்க்கத்தினருக்காக ஒதுக்கப்படும்.

நடுத்தர வர்க்கத்தினருக்காக வீடுகளை பெற்றுக் கொடுக்கும் போது குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு பணித்தார்.

அதற்கமைய மத்திய வர்க்கத்தினருக்கான வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்தும் போது பயனாளர்களுக்கு 30 ஆண்டுகள் வரை 6.25 என்ற வட்டி வீதத்தில் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பல காலமாக செயற்படுத்துவதாக தெரிவித்து தாமதிக்கப்பட்டு வந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களின் பணிகள் மீண்டும் மீண்டும் தாமதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் இதன்போது அறிவித்தார். அதற்கமைய அரச காணிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களில் அவற்றை பெற்று இந்த வாகன நிறுத்த வேலைத்திட்டத்தை நிறைவுசெய்வதற்கு அதிகாரிகளின் ஒப்புதல் கிட்டியது.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்ட வீடமைப்பு திட்டம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் இடைநடுவே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த அனைத்து வீடமைப்பு திட்டங்களினதும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை குறித்த சந்திப்பின்போது தெரிவித்தது.

எதிர்காலத்தில் கலைஞர்களுக்காகவும் வீடமைப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. 2024ஆம் ஆண்டளவில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்ய நகர அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்க்கிறது. பல்வேறு நிதி உதவிகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்கள் வடக்கு, தெற்கு மற்றும் மலையகத்திற்கு மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சாதாரண மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார். இச் சந்தர்ப்பத்தில் நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலகத்தில் ஊழியர் பிரிவு தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்