யாழ் மாவட்டத்தில் உள்ள கிராம சேவையாளர் பிரிவினை இணைத்தல் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்களுக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுமக்கள் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
இதில் ஊர்காவற்துறை, வேலணை, பருத்தித்துறை, கரவெட்டி, தெல்லிப்பளை, நல்லூர் பிரதேச செயலகங்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் HA / 02 / 27 / 02-2020 இலக்க 2021.11.10 ஆம் திகதிய கடிதம் சார்பாக , தங்கள் பிரதேச செயலாளர் பிரிவில் இனங் காணப்பட்ட கிராமசேவையாளர் பிரிவுகளை இணைப்பதற்கான முன்மொழிவுகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளது . மேற்படி முன்மொழிவுக்கடிதம் தங்களின் மேலதிக நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . முன்மொழிவு தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள இணைப்பு பூர்த்தி செய்து
ebjaffna@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பி வைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செயற்பாட்டினால் கிராம அலுவலகர் பகுதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட வாய்ப்புள்ளதால் கிராம அலுவலகர் பகுதிகளை இணைக்க வேண்டாம் எனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.