ஒருதலைக் காதல் பெண் உத்தியோகத்தர் மீது கத்திக் குத்து
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரின் ஒருதலைக் காதலால் யாழ்ப்பாணம் கட்டடத் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் மீது கத்திக் குத்து ஏற்பட்ட நிலையில் அவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வடமாகாண கட்டடத் திணைக்களத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தருக்கே நடைபெற்றது.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விவாகரத்தான பெண் உத்தியோகத்தரை பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஆண் உத்தியோகத்தர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாகவும் குறித்த நபர் தொல்லை கொடுப்பதாகவும் சில தினங்களுக்கு முன்னர் மானிப்பாய் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலீஸாரால் குறித்த நபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று குறித்த நபர் நேற்று அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் உத்தியோகத்தரின் கழுத்து மற்றும் முகம் பகுதிகளில் குத்தி விட்டு மலசல கூட அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார். இதனையடுத்து சக உத்தியோகத்தர்களால் பெண் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த பகுதிக்கு வந்த பொலீஸார் மலசல கூட அறைக்குள் இருந்த நபரை கதவை தட்டி அழைத்த போது பதில் எதுவும் கிடைக்காததையடுத்து தொலைபேசி மூலமாக அறைக்குள் நடப்பதை அவதானித்தனர். குறித்த நபர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவதானித்து கதவை உடைத்து பார்த்த போது அவரின் வயிற்றுப் பகுதி கத்தியால் கிழிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரையும் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.