எரிபொருளுக்கு கரவெட்டியில் புதிய நடைமுறை மக்கள் பாராட்டு
எரிபொருளைப் பெறுவதற்கு கரவெட்டி பிரதேச செயலகம், கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கமும் இணைந்து புதிய நடைமுறையை கொண்டு வந்தமைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பதிவிலுள்ள மற்றும் பாவனையுள்ள வாகனங்களுக்கு அட்டை ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வட்டை வழங்கப்பட்டதன் மூலம் எரிபொருள் கறுப்பு சந்தையில் விற்கப்படுவது தவிர்க்கப்படும். அத்துடன் பலர் தினமும் நீண்ட வரிசையில் காத்திருப்பையும் தவிர்த்துக் கொள்ள முடியும். இதனால் மக்கள் தமது அன்றாட வேலைகளை சுமையின்றி செய்யக் கூடியதாக இருக்கும்.
சிலர் தினமும் எரிபொருளை நிரப்பிய பின்னர் அதனைக் கறுப்புச் சந்தையில் விற்பனை செயவதற்காக தொடர்ந்தும் பல தடவைகள் வரிசையில் நிற்பது அறியக் கூடியதாகவுள்ளது. இதனால் மோட்டார் வாகனங்களை பயன்படுத்தும் பெண்கள், வயோதிபர்கள் மற்றும் வியாபாரிகள் தமது தேவைக்கேற்ப குறித்த நேரங்களில் எரிபொருளை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக கரவெட்டி பிரதேச செயலகமும் கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவுச் சங்கமும், உடுப்பிட்டி பல நோக்கு கூட்டுறவுச் சங்கமும் இணைந்து அட்டையை வழங்கியுள்ளோம். இந்த அட்டை வழங்கும் செயற்பாடு தற்போது முன்னேற்பாடாக அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் ஏற்படும் குறைபாடுகளை இனங்கண்டு சீர்திருத்தும் நடவடிக்கையையும் மேற்கொள்ளவுள்ளோம். இந்த நடைமுறைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணம்படுவது குறிப்பிடத்தக்கது.