வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் அதிபர் நியமனம் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் முறையற்ற அதிபர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்த்து வவுனியா மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபராக திருமதி சத்தியதேவி நந்தசேன நியமிக்கபட்டுள்ளர். இந்த நியமனம் முறையற்ற வகையில் நடைபெற்றமையை சுட்டிக் காட்டி ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த ஊடக அறிக்கையில்
பல்வேறு பொருத்தமற்ற செயற்பாடுகள் அரங்கேறியுள்ளன. அவையாவன
1.நேர்முக தேர்வு இன்றி வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபார்சின் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2.ஏற்கனவே இரண்டு நேர்முக தேர்வுகள் நடைபெற்றும் அது தொடர்பான எந்தவிதமான வெளிப்படுதல்களும் இன்றி இந்த நியமனம் வழங்கப்பட்டமை முறைகேடானது .
3.1C பாடசாலைகள், வகை iii பாடசாலைகளுக்கு நேர்முக தேர்வு நடாத்தப்பட்டு அதிபர் நியமணம் வழங்கபடும் போது 1AB பாடசாலைக்கு நேர்முக தேர்வு நடாத்தாமல் நியமனம் வழங்கப்பட்டமை முறைகேடானதாகும்.
4. முதற் தடவையாக நடைபெற்ற நேர்முக தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இரண்டாம் முறை நேர்முக தேர்விற்கான விண்ணப்பம் கோரியமை தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டமை குறித்த அதிபரை நியமனம் செய்வதற்கான உள்நோக்கத்தை கொண்டிருந்தா? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
5.வலயக்கல்விப் பணிப்பாளரின் தனிப்பட்ட சிபார்சினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கல்விச் செயலாளரினால் நியமனம் வழங்கப்பட்டமையானது வலயக்கல்வி பணிப்பாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடமளிக்கும் நிலைமையை ஏற்படுத்தி உள்ளது.
6. தற்போதைய பிரதமர் அண்மையில் வவுனியாவில் கலந்து கொண்ட பொது நிகழ்வொன்றில் பாடசாலைகளுக்கான அதிபர் நியமனங்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும் என குறிப்பிட்ட விடயம் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது எனவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.