வல்வெட்டித்துறையில் இளம் தம்பதிகள் தீக்கிரை
வல்வெட்டித்துறையில் அதிகாலை துயரம்: தீயில் எரிந்து இளம் தம்பதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வல்வெட்டித்துறை நெடியகாட்டில் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் துயரச்சம்பவம்.
வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர்.
வல்வெட்டித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட மின்சார தாக்கத்தினால் குறித்த அறையில் நிரப்பி வைக்கப்பட்ட பெற்றோல் கான்களில் தீ பற்றியதால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.