வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டபோதும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மக்கள் இதனால் பெரும் வாழ்வாதாரப் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையை கருத்திலெடுத்தாவது விரைவாகவும் முழு வீச்சிலும் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்று கோரினார்.
வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22.04.2025) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எமது திணைக்களங்களால் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல தடவைகள் கலந்துரையாடப்பட்டாலும் செயற்பாட்டு ரீதியில் அதன் தாக்கத்தை மக்களால் உணர முடியவில்லை. எமக்கு தினந்தோறும் மக்களிடமிருந்து வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் அனுப்புகின்றனர். தென்னையை வாழ்வாதாரமாகக் கொண்டு வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. எனவே அவர்களின் பாதிப்புக்களை கருத்திலெடுத்து இதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 2023ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெள்ளை ஈ தாக்கம் பரவியபோது எடுக்கப்பட்ட முயற்சிகளின் அளவைக்கூட இப்போது காண முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தால் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதன் பணிப்பாளர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.
தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் சில விடயங்களைத் தெளிவுபடுத்தினார். இலங்கை முழுவதும் வெள்ளை ஈ தாக்கம் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே இதன் தாக்கம் பெரிதும் அதிகம் எனக் குறிப்பிட்டார். ஏனைய பிரதேசங்களின் காலநிலை குறிப்பாக காற்றுடன் கூடிய மழை காரணமாக வெள்ளை ஈ தாக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதன் பரவல் அதிகமாக உள்ளது எனத் தெரிவித்தார். எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமே கூடுதல் அக்கறை எடுத்து இதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவேண்டும் எனவும், இதற்கான நிரந்தரத் தீர்வு ஆராய்ச்சி அடிப்படையிலேயே அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தற்போது வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணை சேர்வக்ஸல் கரைசலைப் பயன்படுத்தி தென்னை ஓலையின் கீழ்ப் பகுதியைக் கழுவும் செயற்பாடு 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் இதனை முன்னெடுக்கும் போது அந்தப் பிரதேசத்திலுள்ள அனைத்து தென்னை மரங்களிலும் செய்தால் மாத்திரமே அது உரிய வெற்றியைத் தரும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பிராந்திய மேலதிக பணிப்பாளர் – ஆராய்ச்சி எஸ்.ராஜேஸ்கண்ணா, ஒட்டுமருந்தை (Surfactant) சாதாரணமாக பூச்சி நாசினிக்கு பயன்படுத்தும் அளவை விட 4 மடங்கு அதிகம் பயன்படுத்தி தெளிப்பதன் ஊடாக வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேநேரம் இயற்கைமுறையில் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த முயற்சிகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும், மக்களுக்கு வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த அணுகவேண்டிய விவரங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதற்கு அமைவாக உடனடியாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகம் பாதிப்புக்குள்ளான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு இதைக் கட்டுப்படுத்துவதற்கான மாதிரி செயற்பாடுகள் மக்களுக்கு செய்து காட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதேவேளை இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற இராணுவத்தினரிடம், வெள்ளை ஈ கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைக்கான ஒத்துழைப்பும் கோரப்பட்டது.
கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
22.04.2025
[22/04, 20:38] Thileep Uthayan: *ஊடக அறிக்கை இல: 25/04/24*
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22.04.2025) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு என காணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்தக் காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகளால் எமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. குறிப்பாக அவர்களுக்கான மின்சார வசதி இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என மின்சார சபையின் கோருகின்றனர். பாதைகள் அமைப்பதற்கு சில இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. எனவே இந்த விடயங்களைக் களைந்து விவசாயிகள் முழுமையாக விவசாயம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.
வீதிகள் செப்பனிடுவதற்கு இடையூறாக உள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றுவது தொடர்பில் இராணுவத்தினருடன் நேரடியாக நேரில் சென்று பார்வையிடுவதற்கும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு அமைவாக விரைவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள், பிரதேச சபையின் வீதிகள் என்பனவற்றை உடனடியாக செப்பனிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளன என்றும் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் குறிப்பிட்டார்.
மேலும் மின்சார இணைப்புக்கான கோரிக்கை கடிதத்தை முன்வைக்குமாறு மின்சார சபையினர் கேட்டுக்கொண்டனர். அதேவேளை பயனாளிகளின் மின்சார இணைப்புக் கட்டணத்தை வழங்குவதற்கும் யாழ். மாவட்டச் செயலர் இணக்கம் தெரிவித்தார்.
இதேவேளை, பயனாளிகள் விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக காலையில் வந்து மாலையில் செல்ல வேண்டும் என்ற நிலைமை காணப்படுகின்றது எனவும், அவர்கள் அங்கு கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இராணுவத்தினரிடம் முன்வைக்கப்பட்டது. அந்த மனிதாபிமானக் கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடி பதிலளிப்பதாக இராணுவத்தினர் குறிப்பிட்டனர்.
மேலும் விவசாயக் கிணறுகளையும் புனரமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார். தொடர் நடவடிக்கைகளை இராணுவத்தினருடனும், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடனும் வலி. வடக்கு பிரதேச செயலர் தலைமையில் கலந்துரையாடுமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வலி. வடக்கு பிரதேச செயலர், வலி. வடக்கு பிரதேச சபைச் செயலரின் பிரதிநிதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர், இராணுவத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.