வடக்கு மாகாணத்தில் பெண் ஆரம்பிப்பாளராக திருமதி கிருத்திகா சஞ்சயன்

வடக்கு மாகாணத்தில் பெண் ஆரம்பிப்பாளராக திருமதி கிருத்திகா சஞ்சயன் செயற்பட்டு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
உடுவில் மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
தேசிய மட்டத்தில் பல போட்டிகளுக்கு பெண்கள் நடுவர்களாக கடமையாற்றியுள்ளனர்.
ஆனால் வடக்கு மாகாணத்தில் முதன் முறையாக உடுவில் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியின் பயிற்றுநருமான திருமதி கிருத்திகா சஞ்சயன் ஓட்டநிகழ்வுக்கான பெண் ஆரம்பிப்பாளராக செயற்பட்டுள்ளார்.
இது தொடர்பாக உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கருத்து தெரிவிக்கையில் 201ஆவது ஆண்டில் காலடிபதித்த உடுவில் மகளிர் கல்லூரி பெண்களின் சாதனைகளை தன்னகத்தே பதிவு செய்து வருகின்றது. அந்த வகையில் குறித்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கு க.கனகராஜா அவர்கள் ஆரம்பிப்பாராக செயற்பட்டு அவரின் வழிகாட்டலில் திருமதி கிருத்திகா சஞ்சயன் தனது ஆரம்பிப்பார் கடமையை சிறப்பாக செய்துள்ளார். உடுவில் மகளிர் கல்லூரி, பெண்களின் சாதனைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் இனி வரும் காலங்களில் உடுவில் மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டியில் ஆரம்பிப்பு தொடக்கம் நடுவர்கள் வரை பெண்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். எதிர்வரும் 8ம் திகதி மகளிர் தினம், அன்றைய தினம் மட்டும் அவர்களுக்கான கெளரவத்தை வழங்காது வாழ்நாளில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர்களின் கெளரவத்தை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.