Thu. Mar 20th, 2025

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக பரோல் வழங்க கோரி வழக்கு தொடர்ந்த நளினிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 5ம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கியது.
இந்த உத்தரவின்படி ஜூலை 25 ஆம் திகதி பரோலில் வந்த அவருக்கு,சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கியது . பின்னர் , அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்து தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் , இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்து விடுவார் என்பதால் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என இந்த மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இது சம்பந்தமாக அனுப்பிய மனுவை தமிழக அரசு நிராகரித்து விட்டதாகவும் நளினி தனது மனுவில் தெரிவித்திருந்தார் . இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி பரோல் நீட்டிப்பு வழங்க கோருகின்றனர் எனக் கூறி, பரோல் நீட்டிப்பு வழங்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முதலில் இரண்டு வாரங்கள் பரோல் நீட்டிப்பு கோரிய போதும் மூன்று வாரங்கள் பரோல் வழங்கப்பட்டது. சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கமுடியும் என, பரோல் நீட்டிப்பு வழங்க நீதிபதிகள் மறுத்ததையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்