யாழ் மாவட்டத்தில் 2ம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது
கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கு அதன் தொடர்சியாக யூன் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் யூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை வரை இரண்டாவது தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும் .பொதுமக்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் தடவை தடுப்பூசி பெற்றுக் கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதனை போன்றே யூலை மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை இரண்டாவது தடுப்பூசிகளினை பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.