Sat. Apr 20th, 2024

யாழ் மாநகர சபையால் வேலணையில் கொட்டும் கழிவுகள் – மீள அகற்றுமாறு அறிவுறுத்தல்

யாழ் மாநகர சபையின் சுகாதார சீர்கேடான கழிவுகள் வேலணை பிரதேசத்தில் அனுமதியின்றி கொட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளதுடன் மீள அகற்றுமாறு வேலணை பிரதேச சபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபையால் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீளவும் அகற்றுமாறு வேலணை பிரதேச சபை குறித்த தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதுடன் குறித்த செயற்பாட்டிற்கு தமது கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் –
யாழ் மாநகரப் பகுதியில் மாநகர சபையினரால் புல்லுக்குளம் தூர்வாரப்பட்டு வருகின்றது. குறித்த குளத்தில் காணப்பட்ட சேற்றுடன் கூடிய துர்நாற்றம்மிக்க சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையிலான கழிவுகளை வேலணை பிரதேச சபையின் அனுமதியின்றி அதன் ஆளுகைக்கு உட்பட்ட மண்கும்பான் மையப்பகுதிக்குள் டிப்பர் வாகனங்களில் கொண்டுவந்து கொட்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் யாழ் மாநகர சபையின் குறித்த அனுமதியற்றதும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானதுமான நடவடிக்கைக்கு குறித்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அது தொடர்பில் வேலணை பிரசே சபைக்கும் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து குறித்த பகுதிக்கு வேலணை பிரதேச சபையின் அதிகாரிகள் சற்று முன்னர்  சென்றிருந்ததுடன் கொட்டப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்தது திருப்பி அனுப்பியிருந்தனர்.
மேலும் ஏற்கனவே குறித்த பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை மீளவும் அகற்றுமாறு குறித்த குளத்தை தூர்வாரும் தரப்பினருக்கு எழுத்து மூலம் கோரியுள்ளதுடன் யாழ் மாநகர சபையின் இத்தகைய அத்துமீறிய அனுமதியற்ற ஏனைய பகுதியின் சுற்றுச் சூழலை பாதிக்கின்ற நடவடிக்கைக்கு தமது கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ் மாநகர சபையின் கழிவுகளை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குள் எற்கனவே கொட்டப்பட்டு வருவதால் கல்லுண்டாய் பகுதியின் சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் குறித்த யாழ் மாநகரசபை மற்றும் வலி தென்மேற்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கிடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் குறித்த குளத்தின் கழிவுகள் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் அதன் சுற்றுச் சூழைலை பாதிக்கும் வகையில் அனுமதியின்றி கொட்டப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்