முல்லைத்தீவில் மல்யுத்த பயிற்சி முகாம்
வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாட்களைக் கொண்ட மல்யுத்த பயிற்சி முகாம் நேற்று புதன்கிழமை ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் இணைந்து இந்த பயிற்சி முகாமினை ஆரம்பித்து வைத்தனர்.

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் குறித்தொதுக்கபட்ட நிதியில் (PSDG) 60 வீரர்களுக்கான மல்யுத்த பயிற்சி நெறியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 வீரர்கள் கலந்து கொண்டதுடன் வவுனியா, மன்னார், யாழ்ப்பாண வீரர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கான மல்யுத்த பயிற்சியினை தேசிய மல்யுத்த பயிற்றுனர்கள் V. திருச்செல்வம், N நிஷேத் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இந்த ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரச அதிபர் திருமதி.ச.மஞ்சுளாதேவி, விளையாட்டு திணைக்களத்தின் சிரேஸ்ட மாவட்ட விளையாட்டு அலுவலர் S. சதானந்தன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
