மாறி மாறி ஊழல் வாதிகளை காப்பாற்றும் அரசுகள் – சுனில் ஹந்துன்னெத்தி
போர் முடிவுக்கு வந்து ஒரு தசாப்த காலமாகியும் இந்த நாட்டினைக் கட்டியெழுப்ப முடியவில்லை. இதற்கு காரணம் ஊழல். மஹிந்த ஆட்சியில் ஊழல் நடந்தால் அதனை ஐக்கிய தேசியக் கடசி ரணில் அரசு காப்பாற்றும். ரணில் ஆட்சியில் ஊழல் நடந்தால் மஹிந்த அரசு ரணிலை காப்பாற்றும். இவ்வாறு மாறி மாறி ஆதரவு வழங்கி ஊழல்வாதிகளே நாட்டினை ஆடசி செய்து வருகின்றனர் என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
வடக்கில் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடுகின்ற அதேவேளை தென்னிலங்கையில் போரில் அங்கவீனமான இராணுவத்தினர் ஓய்வூதியதுக்காக போராடுகின்றனர். அப்படியானால் இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் ஆட்சி நடத்திய அனைவரும் வெட்க்கித் தலை குனிய வேண்டும்
நாட்டினை ஆண்டு வரும் ஆடசியாளர்கள் மக்கள் மத்தியில் மதவாதத்தையும் இனவாதத்தையுமே வளர்த்து வருகின்றனர். கடந்த 2009 ஆண்டு உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டினை ஆட்சி செய்தார்.அப்போது வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாரும் போராட முன்வராத நிலையில் எமது கட்சியினரே முதன்முதலில் வடக்கில் காணாமல் ஆக்கப்படடவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
அப்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அடியாட்களினால் எமது கடசியின் செயற்பாட்டாளர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் இடம்பெற்றதினால் எமது உறுப்பினர்கள் பலர் காயமடைந்து இருந்தனர்
தற்போதைய அரசு மஹிந்த காலத்தில் நடைபெற்ற சில ஊழல் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அது வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருக்கிறது . மஹிந்த காலத்து ஊழல்களுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தும் ரணில் மஹிந்தவையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்றி வருகின்றனர்.
இனிவரும் காலங்களில் மஹிந்த குடும்பம் ஆட்சிக்கு வந்தால் கூட ரணிலின் ஆட்சியில் நடைபெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இவ்வாறான ஊழல்வாதிகளை மக்கள் ஒதுக்கி புதிய மக்கள் ஆட்சியென்றை அமைக்க எமது கட்சிக்கு ஆதரவினை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்