மலசலகூட குழியினுள் விழுந்து சிறுமி உயிரிழப்பு
வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியினுள் விழுந்து 6 வயதுச் சிறுமி இன்று (10) உயிரிழந்துள்ளார். உறவினர்களின் அழுகுரலால் வவுனியா வைத்தியசாலையே சோகமயமாகியது. சம்பவத்தில் பன்றிக்கெய்தகுளத்தைச் சேர்ந்த சத்தியசீலன் சஜீவினி (வயது 6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி தெரிவதாவது, தற்போது பெய்த மழையால் வீட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது. இதனைச் சீர்படுத்துவதற்காக தாய் தந்தை இருவரும் மரம் வெட்டுவதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்தனர். வீட்டில் 3 பிள்ளைகளும் விளையாடிக் கொண்டிருந்த போது மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியினுள் மழை நீர் தேங்கி இருந்தது. இதில் சஜீவினி வழுக்கி விழுந்துள்ளார். அயல் வீட்டுக்காரர்கள் குழந்தையை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.