Thu. May 21st, 2026

மன்னார் மாவட்டத்தின் 2020ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

 

மன்னார் மாவட்டத்தின் 2020ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பான வரவு செலவு திட்டங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக  அனுமதிகள் பெற்றுக் கொள்வது தொடர்பான முன்னோடி கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்ராஸின் நெறிப்படுத்தலில், மன்னார் மாவட்ட  அபிவிருத்திக் குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  காதர் மஸ்தான் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலாளர்கள் , திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்டத்தின் பல திட்டங்கள் குறித்த அவசிய தேவைகளை கருதி திட்டங்கள் விரைவு படுத்தல் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் குறித்த கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதனை தொடர்ந்து  மன்னார் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் முசலி பிரதேசத்தில் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இடம் பெற்றுவரும் காணிகள் தொடர்பான பிரச்சனைகள் பாதிப்பை எதிர் கொண்ட மக்களுடனான சந்திப்பு காதர் மஸ்தான் தலைமையில் இடம் பெற்றது.
 இதற்கு வடக்கு மாகாண காணி ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் மற்றும் உதவி ஆணையாளர் கைலாசபிள்ளை மகேஸ்வரன் உட்பட அரச அதிபர் மற்றும் முசலி பிரதேச செயலாளர் பாதிப்புக்குள்ளான முசலி பிரதேச மக்கள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 இதன் போது முசலி பிரதேச பகுதியில் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வீட்டு திட்டங்கள் அமைக்கப் பட்டும் அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் வீட்டுத்திட்டம் இன்றி புறக்கணிக்கப்பட்டு உள்ள நிலையில் குறித்த காணி விடயங்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இடம் பெறுவது சுட்டிக்காட்டப்பட்டு   அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் முகமாக காணி ஆணையாளர் முன்னிலையில் குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
 முசலி பிரதேச பகுதியில் சுமார் 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் வன வளத்திணைக்களம்  குறித்த காணிகளை  விடுவிக்காத நிலையில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பது சிரமங்கள் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 600 ஏக்கர் காணிகளுக்கு 1500 காணி உரிமங்கள் வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த  நிலையில் குறித்த முசலி பிரதேச காணிகள்  தொடர்பாக பாராளுமன்ற பொது கணக்கு குழுவில் விசாரணைகள் உட்படுத்தப்பட்டு வருகின்றமை சுட்டிக் காட்டப்பட வேண்டிய தொன்றாகும்.
 இவ்வாறு இருக்கும் நிலையில் குறித்த பிணக்குகள் உரியமுறையில் தீர்க்க படுவதற்கான வழிவகைகள் சரியான முறையில் ஆராயப்பட்டு இதற்கான தீர்வு எட்டப்படும் என காணி ஆணையாளர் தெரிவித்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்   தெரிவிக்கையில்,,,
 அரசியல் இலாபம் கருதி குறித்த பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இழுபறி நிலையில் இதை காட்டியே வாக்கு பெறுவதற்கான நடவடிக்கையாகவே கையாளப்பட்டு வந்த பிரச்சனை.
தற்போது பிரச்சனை என்ன என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கான தீர்வை வரும். தொடர்ச்சியான கூட்டங்கள் இடம் பெறும் எனவும் தீர்வு பெறப்படும் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed