மனோகரா வலைப்பந்தாட்ட கிண்ணம் வதிரி பொம்மேர்ஸ் அணி வசம்
வடமராட்சியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டியில் வதிரி பொம்மேர்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகம் நடத்திய வடமராட்சிக்கு உட்பட்ட அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான வலைப்பந்தாட்ட போட்டிகள் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதியாட்டத்தில் வதிரி பொம்மேர்ஸ் அணியை எதிர்த்து அல்வாய் நக்கீரன் அணி மோதியது. இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தனர். இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில் அல்வாய் நக்கீரன் அணியினர் உத்வேகமாக விளையாடினர். இதில் அவ்வணி வீராங்கனை மீருஷாவின் ஆட்டம் கண்களை கவர்ந்தது. இதனால் நக்கீரன் அணி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இறுதிவரை இரு அணிகளும் வெற்றிக்காக போராடினர். இதில் பொம்மேர்ஸ் அணி வீராங்கனை அனுஷியாவின் தடுப்பாட்டத்தால் நக்கீரன் அணியினரின் கோல் போடும் முயற்சிகள் தவறவிடப்பட்டது. இதனால் ஆட்ட நேர முடிவில் வதிரி பொம்மேர்ஸ் அணி 23:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.