மகளிர் கிண்ணம் இராமநாதன் மகளிர் கல்லூரி வசமாகியது
மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தொடரில் இராமநாதன் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையே மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 16 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதன் இறுதியாட்டத்தில் இராமநாதன் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் இராமநாதன் மகளிர் கல்லூரி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதில் சிறந்த பேற்றுக்கெய்யும் வீராங்கனையாக இராமநாதன் மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த கே.கம்ஷிகா, சிறந்த மையப் பிரதேச வீராங்கனையாக அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சி.பரின்ஜா, சிறந்த தடுப்பாளராக இராமநாதன் மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ரி.கிருஷிகா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் செல்வி. எஸ். மனோன்மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக CDB யாழ் கிளை முகாமையாளர் திருமதி.சுரமியா சுதர்சன், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரியர் திருமதி. மிதிலா ரமணன், கெளரவ விருந்தினராக கஜமுகன் ஹாட்வெயர், கல்வி காருண்யன் லயன் ஈ.எஸ்.பி. நாகரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.